Montag, 2. April 2012

இதுதான் ரகசியம்.. by vayal எல்லா பெற்றோர்களுக்கும் இப்போது வந்து விட்ட இயல்பான உணர்வு, குழந்தைகளைப் பற்றிய டென்ஷன்! அதுவும் 13, 14 வயது பிள்ளைகளாக இருந்துவிட்டால், இதுவரை பாக்கியமாக கருதப்பட்ட அவைகள் இப்போது பாரமாக கனக்கத் தொடங்கிவிட்டது பெற்றோருக்கு! வீட்டில் பெற்றோர்களை சுற்றிச்சுற்றி வந்த அந்த பிள்ளைகள், இந்த பருவத்தில்தான் வெளி நண்பர்களிடத்தில் நெருங்கி, உறவைத் துளிர்விட வைக்கிறார்கள். வெளி உலகத்தைப் பார்த்து பிரமிப்பார்கள். முன்பு தெரியாத விஷயங்களையும், முன்பு பெறாத அனுபவங்களையும் நண்பர்கள் மூலம் பெற்று, நண்பர்களே உயிர், நண்பர்களே உலகம் என்று கருதுவார்கள். இந்த சூழ்நிலையில் நண்பர்களிடத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபமோ, பள்ளிக்கூடத்தில் நடந்த கசப்பான சம்பவங்களோ பிள்ளைகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பருவத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பருவ குளறுபடிகளும் அவர்கள் மனதை குழப்புவதால் எது சரி, எது தப்பு என்று தெரியாமல் பிள்ளைகள் தவிப்பார்கள். பருவகாலம் தரும் தவிப்பு பிள்ளைகளின் பேச்சு, செயலில் வெளிப்படும். அப்போது பெற்றோர், `நேற்று வரை இவள் நாம் என்ன சொன்னாலும் சரிப்பா.. சரிம்மா என்று தலையை ஆட்டினாளே! இன்று இதுதான் என் கருத்து.. இதுதான் எனக்கு பிடிக்கும்.. எனக்கு பிடிக்காதவற்றை ஏன் செய்கிறீர்கள்.. என்றெல்லாம் கேட்கிறாளே' என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் அதை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்தவர்கள் முன்னால் வைத்துகூட மகளை (மகனை) தட்டிக்கேட்கிறார்கள். கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடுகிறார்கள். பிள்ளைகளை தொடர்ந்து வார்த்தைகளால் கொத்திக்கொத்தி `நீ ரொம்பவும் மாறிவிட்டாய். நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. உன் நண்பர்கள் சொல்வதைத்தான் கேட்கிறாய்' என்றெல்லாம் பேசிவிட்டு, அந்த நண்பரைப் பற்றியும் தவறாக சித்தரிக்கிறார்கள். இப்படி பெற்றோர்கள் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? தங்கள் குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி மாற்றத்தை பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதுதான் காரணம். நாம் சொல்வதை மட்டுமே கேட்டு, நம் பின்னாலே நடந்துகொண்டிருந்த பாலகனை நமக்கு பிடித்திருந்தது. அவனே பெரியவனாகி கருத்தில், செயலில் சற்று வலிமையை காட்டும் போது நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அப்போது அவன் மீது அதுவரை காட்டிய அன்பில் இருந்த தூய்மைபோய், எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது. பெற்றோர்கள் எதிர்பார்ப்பையும், எதிர்ப்பையும் கைவிட்டு, அவன் மீது நம்பிக்கையும் அன்பும் வையுங்கள். குறைவற்ற அன்பை அவன் மீது கொட்டினால், `இன்று அவனுக்கு என்ன பிரச்சினை? ஏன் இப்படி நடந்துகொண்டான்?' என்று அவனிடம் வாஞ்சையோடு நடந்துகொள்ள முன்வருவீர்கள். அப்போது அவனுக்குள், `நாம் பெற்றோரிடம் பக்குவமின்றி கடுமையாக நடந்துகொண்டோமோ' என்ற எண்ணம் வரும். அவன் மனதில் இருப்பதை எல்லாம் பெற்றோரிடம் கொட்டிவிடுவான். நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்தால், பிள்ளைகள் கசப்பானதாக இருந்தாலும், கடுமையானதாக இருந்தாலும் மறைக் காமல் உண்மைகளை உங்களிடம் சொல்லிவிடுவார்கள். அவர்கள், உங்களிடம் உண்மை களை சொல்லும் நிலை ஏற்படும்போது, அவர்கள் உங்களை முழுமையாக நம்புகிறார்கள் என்று அர்த்தம் கொண்டுவிடலாம். அப்போது உங்களுக்கு பிள்ளைகளால் டென்ஷனே ஏற்படாது.

Donnerstag, 22. März 2012

by vayal சாப்பிட உட்கார்ந்தால் நமக்கு முன்பு இருக்கும் உணவுகளை பார்த்து முதலில் கண்கள் ஆசைப்படும், பிறகு கைகள், அதன்பிறகு நாக்கு, கடைசியாகத்தான் வயிறு! ஆனால், உணவை பார்த்து ஆசைப்படுவதுடன் கண்களின் வேலை முடிந்துவிடும். உணவை எடுத்து வாயில் வைத்தவுடன் கையின் வேலையும், ருசிப்பதுடன் நாக்கின் வேலையும் முடிந்து போகிறது. ஆனால், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் முக்கியமான, கடினமான வேலையை வயிறுதான் செய்கிறது. வேடிக்கை என்னவென்றால், தேவைப்படும் உணவு கிடைத்தவுடன் `இனி வேண்டாம், போதும்' என்று வயிறு மூளைக்கு சிக்னல் செய்துவிடுகிறது. உடனே மூளை, இந்த சிக்னலை கைகள், கண்கள், நாக்கு என எல்லாவற்றுக்கும் அனுப்பி `உணவு உண்பதை நிறுத்து' என்று ஆணையிடுகிறது. ஆனால், உணவின் மீதுள்ள பேராசையால் கண்கள், கைகள், நாக்கு எல்லாம் சேர்ந்து தேவைக்கு அதிகமான உணவுகளை தொடர்ந்து வயிற்றுக்குள்ளே தள்ளிக்கொண்டே இருக்கின்றன. விளைவு, உடல் பருமன், அதைத்தொடர்ந்து வரும் இதய நோய்கள், மூளைக் குறைபாடுகள் என பல ஆரோக் கியம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால், மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்துவிடுகிறது என்கிறது அறிவியல். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், `ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால் மூளையின் திறன் அதிகமாகிறது, உடல் எடையும் குறைகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது' என்கிறது அமெரிக்காவின் `நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்' ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று. விலங்குகள் மீதான முதற்கட்ட ஆய்வில், மிகவும் குறைந்தபட்ச கலோரிகளை உண்டுவந்த விலங்குகள் சாதாரண விலங்குகளை விட இரு மடங்கு அதிக நாட்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின்னர், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையை மனிதர்கள் மீதான ஆய்விலும் பயன்படுத்தினர். ஆய்வின் இறுதியில், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறை இதயம், ரத்த நாளங்கள் மற்றும் மூளை ஆகியவற்றை வயோதிகம் சார்ந்த நோய்களான அல்சீமர்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. `உணவுக் கட்டுப்பாட்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உண்ணும் முறையை கடைபிடிப்பதால், உடல் செயல்பாடுகள் சார்ந்த உளைச்சல்களை, பாதிப்புகளை சமாளிக்கும் திறன் நரம்புகளில் (நரம்பு உயிரணுக்கள்) தூண்டிவிடப்படுகிறது என்பதை கண்டுபிடித்தோம்' என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் மார்க் மேட்சன். இந்த ஆய்வுக்கான சோதனையில், இரு குழுக்களாக பிரிக்கப்பட்ட எலிகளில் ஒரு குழு எலிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்டது. மற்றொரு குழு எலிகளுக்கு தினமும் உணவு கொடுக்கப்பட்டது. இந்த இரு குழுக்களில் உள்ள எலிகள் அனைத்துக்கும் உணவு கொடுக்கப்பட்டபோது, தேவைக்கு அதிகமான அளவுகளில் கொடுக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் ஒரே அளவு கலோரிகளை எடுத்துக்கொண்டன. முக்கியமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகள் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய `இன்சுலின்' என்னும் ஹார்மோனை குறைவான அளவிலேயே உற்பத்தி செய்தன. உணவுக்குப் பின்னான உடலின் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் பண்புள்ள இன்சுலின் ஹார்மோன், அதிக அளவுகளில் சுரந்தால் மூளையின் திறன் குறைந்து போவதோடு, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சோதனைக்கு பின்னர் இரு குழுவின் எலிகளுடைய மூளைகளும் பரிசோதிக்கப்பட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையிலுள்ள `சினாப்ஸ்' என்னும், மூளை உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகளின் செயல்பாடுகள் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சினாப்ஸ், மூளையில் புதிய உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றுக்கு உளைச்சல் அல்லது பாதிப்புகளை தாங்கும் சக்தியையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய உணவு கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகளில், சில நாட்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையின் பலனை அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உயிரணுக்களை பட்டினி போடுவதன் மூலம் அவற்றை `சர்வைவல் மோடு'க்கு கொண்டு செல்கிறோம். இதனால் அவற்றுக்கு புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபியினால் ஏற்படும் சேதங்களை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் திறன் கிடைக்கிறது என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதிலிருந்து, `உணவே மருந்து, மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் சொன்னது அறிவியல்பூர்வமாக உண்மைதான் என்பது புரிகிறது. ஆக, உணவுக்கட்டுப்பாடுதான் `ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலத்தை பெறுவதற்கான சுலபமான வழி'. முனைவர் பத்மஹரி

Donnerstag, 8. März 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 10. பேசாமல் இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. Dr.M.Sathick from Darulsafa

Dienstag, 6. März 2012

உறவை சிதைக்கும் போட்டி உலகம் by vayal குழந்தையாக இருந்தபோது உடை, தின்பண்டம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். பாசமாக பழகுகிறோம். வளர்ந்த பிறகு எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்க்கிறோம், சண்டை போடுகிறோம். வளர வளர எதிர்ப்புணர்ச்சியும் வளர்கிறது. ஏன்? குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் அன்பிற்காகப் போட்டியிடுகிறோம். மாணவப் பருவத்தில் படிப்பு, விளையாட்டில் போட்டி போடுகிறோம். வளர்ந்ததும் மற்றவரின் கவனம் கவருவதற்காகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து பெறுவதற்காகவும் போட்டியிடுகிறோம். இப்படி வாழ்க்கையின் பெரும் பகுதி போட்டி போடுவதிலேயே கழிகிறது. அதனால் பொறாமை எண்ணம் நம் உடன்பிறப்பாகவே உள்ளுக்குள் வளர்ந்து விடுகிறது. அதுவே அன்புறவை சீர்கெடுக்கிறது. வளர்த்த பெற்றோரையே வாடி நிற்கும் அளவுக்கு தவிக்கவிடும் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுகிறோம். இதனால் உடன் பிறந்த சகோதரர்களையும் `நீயா, நானா?' பார்த்து விடுவோம் என்று பகையாளி போல் பார்க்க வைக்கிறது. வெற்றி பெறாதவர், வெற்றி பெற்றவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார், வலியவர் எளியவரை கேலி செய்கிறார், இருப்பவர் இன்னும் பெரியவரை எண்ணி ஏக்கப் படுகிறார். மனமெங்கும் பொறாமையும், பகையுணர்வுமே விஞ்சி நிற்கிறது. ஏன் நமக்குப் பொறாமை வருகிறது? ஏன் குடும்பங்கள் பிரிந்து போகின்றன? இந்தக் கேள்விகளுக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். விட்டுக் கொடுக்காமை தான். பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே அதை நாம் பேசித் தீர்ப்பதில்லை. அது பெரிதாகிய பின் அதை சாதாரண முறைகளில் பேசித் தீர்ப்பது சிக்கலாகி விடுகிறது. நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நாம் மன்னிப்புக் கேட்பதில்லை. நாம் முரண்படும்போது முரட்டுத்தன சிந்தனைக்கு தயாராகி விடுகிறோம். அண்டி வாழும்போது அடிவருடிகளாகவும் மாறி விடுகிறோம். நாம் கேள்விப்படும் தகவல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அப்படியே நம்பி விடுகிறோம். வதந்தியை நம்பி முடிவெடுக்கிறோம், சொந்தங்களைக் கண்டிக்கிறோம். மரியாதை கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். இவையெல்லாம் பிரச்சினை பெரிதாவதற்கு முக்கியக் காரணங்கள். பலவீனமானவர்களைச் சுரண்டும், பணக்காரர்களை அண்டி வாழும் நமது பலவீனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நமக்கும் பல நேரங்களில் மன்னிக்கும் குணத்தை விட பழி வாங்குவதே சரியென்று படுகிறது, நாமும் ஒருநாள் வயோதிகர்களாக மாறுவோம் என்பதை இன்றைய பொழுதுவரை நாம் மறுக்கிறோம். எதையும் எதிர்த்து மார் தட்டுகிறோம். இவையெல்லாம் நாம் சரியான மனிதனில் இருந்து நழுவி சராசரிகளில் ஒருவனாக வாழ்வதற்கு முக்கியக் காரணமாகிறது. கூட்டமாக வாழ்வதுதான் மனித இயல்பு, அதனால்தான் நமது குடும்பங்களுக்கு வெளியிலும் நாம் நம் உறவைத் தேடுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தால்தான் நமக்கு முழுமை உணர்வு கிடைக்கிறது. உறவைக் கவனமாகப் பாதுகாக்காவிட்டால் வாழ்வு கசந்துவிடும். உறவு பேணுவதை எப்படிச் செய்வது? `எனக்கு முன்னால் நடக்காதே நான் பின் தொடரமாட்டேன். எனக்குப் பின்னால் நடக்காதே நான் வழிகாட்ட மாட்டேன். என்னோடு கூட நட, என் நண்பனாய் இரு', அறிஞர் ஆல்பர்ட் காம்யூவின் அற்புத வரிகள் இவை. மனிதர்களுக்கு எப்போதுமே `தான்' என்ற அகங்காரம் உண்டு. அவனால் முன்னால் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பின்னால் வருபவர்களை அரவணைத்துச் செல்ல முடியாது. தனக்கு சமமாக நட்பு பாராட்டுபவனிடம் மட்டும் அவன் சாதுவாக இருக்கிறான். இதுவே மனித சுபாவம். மனிதன் இயல்பே இப்படி இருப்பதால் யாருமே அப்பழுக்கற்றவர் அல்ல. இருந்தாலும் நீங்கள் திறந்த மனதுடன் இருங்கள். அன்பாகப் பேசுங்கள். ஒவ்வொருவர் முன்னுரிமையும் வேறுபடும், எனவே ஒவ்வொருவர் உறவிலும் இடைவெளியும் பேணுங்கள். மனித உறவில் சூழ்ச்சி கூடாது. மற்றவரின் குறைகளை மன்னிப்பதால் பதிலுக்கு நாமும் மன்னிக்கப்படுவோம். "நீ அன்பாக இருப்பதாலும், இரக்கமாக நடந்து கொள்வதாலும் உன்னை பிறர் கோழை என்று எண்ணக்கூடும். இருந்தாலும் நீ அன்புடன் இரு'' என்று காந்திஜி சொன்னதைப்போல, நாம் உறவு பேணுவோம். மனத்தளவிலும் உயர்வு பெறுவோம்.

Freitag, 2. März 2012

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள் by vayal உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும். தவறான மனோபாவம் சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன. முழுமையாக கேளுங்கள் ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும். எதிராளியை சந்தோசப்படுத்துங்கள் ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை. எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள் நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம். வாழ்க்கை எளிதாகும் திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும். எதிர்மறைகளை விலக்குங்கள் எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது. நிதானத்தை கடைபிடியுங்கள் நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது. மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.

Donnerstag, 1. März 2012

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்! by vayal தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள் புரிதல் வேண்டும் நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்? மனதை வருடும் பேச்சு உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது. திருப்தி அடையச் செய்யுங்கள் திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள். மனதில் நினைத்தால் தெரியாது தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நோ அட்வைஸ், நோ ரூல்ஸ் தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும். மிகச்சிறந்த நபர் கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

Mittwoch, 29. Februar 2012

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்! by vayal உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம். சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம். அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும். வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.